10 வருட அவல வாழ்க்கைக்கு பின் 21 லட்சம் பெற்ற இலங்கை பெண்…!!
10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்குமான சம்பளத்தொகையினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலதா அத்துகோரள இன்று கையளித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2006ஆம் ஆண்டு பெலியத்த பிரதேசத்தைச்சேர்ந்த நந்தா மனம்பெரே என்ற பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வீட்டுப்பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.
குறித்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத நிலையில், தனது குடும்பத்துடன் தொடர்புகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் தொழில் செய்த வீட்டினர் வழங்கியிருக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தகவல்கள் எதுவும் பெற்றுக்கொள்ள முடியாதிருந்தது.
இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்தகோரளவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட அமைச்சர் சவூதி தூதரகத்துக்கு முறையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் பணிபுரியும் வீட்டில் 10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் வழங்காமல் பலவந்தமாக அந்த வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சவூதி தூதரகத்தின் தலையீட்டுடன் குறித்த பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகளுக்கு கிடைக்கவேண்டிய சம்பளப்பணமான 54ஆயிரம் ரியால் அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.
சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த நந்தா மனம்பெரே நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், இன்று அவருக்குரிய காசோலை (21 லட்சம்) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating