பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்ககூடாது என தடுத்த கொடிய தந்தை…!!
கேரள மாநிலத்தில் நபர் ஒருவர் மதரீதியான காரணத்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என மனைவியை வற்புறுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அபுபக்கர் என்பவரது மனைவிக்கு அங்குள்ள மருத்துவமனையில் பிற்பகல் 1.30 மணியளவில் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுமாறு அங்கிருந்த செவிலியரிகள், தாயிடம் கூறியுள்ளனர். ஆனால், அவரோ மசூதியிலிருந்து 5 பிரார்த்தனை அழைப்புகள் வரும் வரையில் தாய்ப்பால் ஊட்டக்கூடாது என்றும், குழந்தை இறந்துவிட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வேன் என தனது கணவர் கூறியதாக செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிலை கேட்டு செவிலியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அபுபக்கரிடம் கேள்வி எழுப்புகையில், ”நான் ஹைட்ரோஸ் கோயா தங்கல் என்னும் மதகுருவை பின்பற்றுகிறேன். எனது முதல் குழந்தைக்கு இதைத் தான் பின்பற்றினேன். மெக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட நீரையும், தேனையும் கொடுத்தேன். குழந்தைக்கு எந்த அசம்பாவிதமும் நேரவில்லை. அதைப்போல் இந்த குழந்தைக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை சார்பில் பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பொலிசாரின் அறிவுரையையும் ஏற்க மறுத்த அபுபக்கர் தனது மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
குழந்தை பிற்பகல் 1.30 மணிக்கு பிறந்ததாகவும், மாலை 7.30 மணிக்கு மருத்துவமனையை விட்டுச் செல்லும்வரை குழந்தைக்கு பாலூட்ட மனைவியை அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பாக அபுபக்கர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை மேலாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating