மகள் திருமணத்துக்கு பணம் கிடைக்காமல் தவித்த தந்தை…!!
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்தே நாடு முழுவதும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
அத்தியாவசிய தேவை, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பணம் தேவைப்பட்டதால் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள்.
சென்னையில் மகளின் திருமணத்துக்காக பணம் கிடைக்காமல் ஒரு தந்தை பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்.
அவரது பெயர் எஸ்.ரவிச்சந்திரன். மகள் காயத்ரி. சாப்ட்வேர் நிறுவன ஊழியரான இவருக்கும், வசந்த் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக பணம் கிடைக்காமல் ரவிச்சந்திரன் பெரும் தவிப்புக்கு உள்ளானார்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கொடுத்து நாள் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமே பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அவருக்கோ திருமணத்துக்கு ரூ.2 லட்சம் தேவையாக இருந்தது.
ரிசர்வ் வங்கிக்கு திருமண அட்டையை கொண்டு சென்று தங்களது கோரிக்கையை பரிசீலித்து உதவுமாறு கேட்கப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகளோ அவரது வேண்டுகோளை நிராகரித்தனர். பழைய நோட்டுகளுக்கு பதிலாக ரூ.8 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதுவும் 3 மணி நேரம் காத்திருந்து கிடைத்தது.
வங்கி கைவிட்ட நிலையில் நண்பர்கள் முயற்சி எடுத்து திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறும்போது, “நான் யாரிடம் என்ன சொல்வது, யாருமே ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க விரும்பவில்லை. என்னிடம் உள்ள ரூ.2 லட்சம் மதிப்பில்லாத காகிதமாக இருந்தது” என்றார்.
Average Rating