பாலஸ்தீன துணை பிரதமர் கைது : இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
லெபனானுக்கும் இஸ்ரே லுக்கும் இடையே 35 நாட்களாக நடந்த போர் ஐ.நா. சபை மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே 5 நாட்களாக போர் நிறுத்தம் நீடித்தது. லெபனாலில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வாபஸ் ஆனது. போர் நிறுத்தத்தை கவனிக்க ஐ.நா. அமைதிப்படை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி நேற்று லெபனானின் கிழக்கு பகுதிக்குள் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசினர். கமாண்டோ படையினரை ஹெலிகாப்டரில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஆதிக்கம் உள்ள பிகா பள்ளத்தாக்கு பகுதிகளில் இறங்கியது. அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த சண்டையைதடுக்க ஐ.நா. அமைதிபடையினர் விரைந்தனர்.
இந்த தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்துக்குள் புகுந்தது. கடந்த வாரங்களாகவே பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ஆளும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை கைது செய்து வருகிறது.
நேற்று ரமலா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன துணை பிரதமர் நசார் ஷீர் வீட்டை முற்றுகையிட்டது. அதி காலையில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த துணை பிரதமரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து இஸ்ரேலுக்கு கொண்டு சென்றது. ஏற்கனவே பாலஸ்தீன சபாநாயகரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து தங்கள் காவலில் வைத்துள்ளது.