உடலை சிதைத்து தீவிரவாதிகள் வெறியாட்டம்: காஷ்மீர் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!
பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற சுமார் 200 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை கடந்த மாதம் எச்சரித்தது. இதையடுத்து தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து வேட்டையாடும் நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பந்திப்பூர் மாவட்டத்தில் வனப் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்.
கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதேபோல் இன்று அதிகாலை ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்எஸ்புரா செக்டரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதியை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் உள்ள மச்சல் செக்டாரில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இறந்துபோன வீரர்களில் ஒருவரின் உடல் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வடக்கு கட்டுப்பாட்டு தலைமையகம் டுவிட் செய்துள்ளது.
Average Rating