தூக்கில் இளம்பெண் பிணம்: கணவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்…!!
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மேலச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். கூலித் தொழிலாளி.
இவரது மனைவி தமிழரசி (32). இவர்கள் கடந்த 9 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தருண் (5) என்ற மகனும் கிருத்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழரசி வீடு அருகே தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அறிந்த தமிழரசி உறவினர்கள் அங்கு வந்தனர். தமிழரசி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.
எனவே கணவர் மற்றும் உறவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சப்- கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தமிழரசியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Average Rating