நான்கு நாட்களுக்கு பின் மாணவனின் சடலம் கரையொதுங்கியது..!!
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி வெள்ளிக்கிழமை காணாமல் போன மாணவனின் சடலம் இன்று திங்கட்கிழமை (28) காலை புன்னக்குடா கடற்கரையில் கரையொதுங்கியதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
பன்குடாவெளி, தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்சன் என்ற 17 வயதுடைய மாணவனின் சடலம் காணாமல் போன கடற்கரையில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கலை பிரிவில் முதலாம் வருடம் கல்வி பயிலும் மாணவர்கள் குழுவொன்று வெள்ளிக்கிழமை (25) மாலை புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற வேளை பாரிய அலையொன்றில் மூவர் நீரில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர்.
சற்று நேரத்தில் சேகுதாவூத் அக்ரம் என்ற மாணவன் மயக்கமடைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளார். ஏனைய இருவரும் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போயிருந்த ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய அல்ஹர்தீன் பர்ஹான் என்பவர் களுவன்கேணி புன்னக்குடா எல்லைப் பகுதியிலுள்ள சேற்றுக் குழியில், புதையுண்ட நிலையில் சனிக்கிழமை (26) மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
பன்குடாவெளி தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்சனைத் தேடும் பணியில் கடற்படை, மீனவர்களுடன் இணைந்து பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.
Average Rating