புயல் தாக்கிய பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் பேர் மீட்பு…!!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வார்தா புயல் சென்னை துறைமுகம் அருகே நேற்று மதியம் 2.30 மணியில் கரையை கடந்தது. அப்பொழுது மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனை அடுத்து பலத்த மழையும் பெய்தது.
இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்து விழுந்தது. நகரத்தின் அனைத்து சாலைகளிலும் மரக்கிளைகள் சாய்ந்து கிடக்கின்றன.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட புயல் தாக்கிய மாவட்டங்களில் இருந்து இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
சுமார் 300-க்கும் அதிகமான நிவாரண முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, இருக்கை மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
புயல் தாக்கிய தமிழகத்தின் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 19 குழுவினர் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 10,432 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 11,857 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
297 சாலைகள் மூடப்பட்டது. அதில் 89 சாலைகளின் பாதைகள் சரி செய்யப்பட்டுள்ளன. 3,384 மரங்கள் சாய்ந்துள்ளன. 30 மின்சார
மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. புயலானது நள்ளிரவு முதல் வேகம் குறைந்து, நாளை வலுவிழந்து விடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating