கயத்தாறு அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்…!!
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை ஒரு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். பஸ்சை சேலத்தை சேர்ந்த சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த பஸ் இன்று காலை 6 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் விலக்கு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர்.
பின்னர் சிறிது நேரத்தில் ரோட்டோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சந்திரன், மாற்று டிரைவரான குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த சுந்தரம் (40) மற்றும் பயணிகள் 6 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating