ஆப்கானிஸ்தான் எம்.பி. வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு…!!
ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மற்றும் காபூல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல்கள், துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக காபூல் நகரின் பாதுகாப்பு நிலைமை இந்த ஆண்டில் மிகவும் மோசமாக உள்ளது.
இந்நிலையில், காபூல் நகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் மிர் வாலியின் வீட்டிற்குள் நேற்று இரவு நுழைந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
எம்.பி. வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 10 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் எம்.பி.யின் 2 பேரக்குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகினர். எம்.பி., அவரது மனைவி உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டை முடிவுக்கு வந்ததும் உள்ளே சிக்கியிருந்த 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எம்.பி.யின் வீட்டில் பாதுகாப்புப் படையினரின் முக்கிய ஆலோசனை நடைபெற்றதால் தாக்கியதாக கூறியுள்ளது.
Average Rating