ராணிப்பேட்டை அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து பலி: கணவர் தலைமறைவு…!!
ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. பால் வியாபாரி. இவருக்கும், சோளிங்கர் கொடைக்கல் புதுகுடியானூரை சேர்ந்த குப்பன்-இந்திரா தம்பதியின் மகள் சசிகலாவுக்கும் (வயது 28) கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சீர்வரிசை பொருட்களை கொடுத்து சசிகலாவை அவரது பெற்றோர் திருமணம் செய்து கொடுத்தனர். சசிகலா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், அவரது நடத்தையில் முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் சசிகலாவுக்கும், முத்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நடத்தையை குறை சொல்லி முத்து தாக்குவதால் மனமுடைந்த சசிகலா தனது தாய் வீட்டிற்கு சமீபத்தில் சென்றுள்ளார். ஆனாலும், சந்தேக பார்வை முத்துவுக்கு தொடர்ந்து இருந்தது.
கர்ப்பிணியான தனது மனைவியை பார்க்க முத்து நேற்று மாமனார் வீட்டிற்கு சென்றார். இனி சந்தேகப்பட மாட்டேன், சந்தோஷமாக சேர்ந்து வாழ்வோம் என மனைவியை அழைத்தார். சசிகலாவும் கணவரின் ஆசை வார்த்தையில் மன மிறங்கி அவருடன் சென்றார். கணவரது வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் சசிகலா மீண்டும் மனம் வறுந்தினார். ஏனெனில் நடத்தையை குறை கூறி முத்து திட்டினார். பிறகு நேற்று மாலை முத்து பால் கறக்க சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சசிகலா மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சசிகலாவை மீட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதையறிந்த சசிகலாவின் கணவர் முத்து உடனடியாக தலைமறைவாகி விட்டார். ராணிப்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிர மணி மற்றும் போலீசார் சசிகலாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை மறைவான முத்துவை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இச்சம்பவத்தில் தீக்குளித்து இறந்த சசிகலாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் முருகேசனும் விசாரணை நடத்துகிறார்.
Average Rating