12 இந்தியர்கள் கைது: ஆலந்துக்கு இந்தியா கண்டனம்
தீவிரவாதிகள் என்று கூறி 12 இந்தியர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்த ஆலந்து நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆலந்து நாட்டிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய அமெரிக்காவின் நாட் வெஸ்ட் நிறுவன விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக கூறி போர் விமானங்கள் பாதுகாப்புடன் அந்த விமானத்தை ஆம் ஸ்டர்டாம் விமான நிலையத்தில் ஆலந்து பாதுகாப்புப் படையினர் தரையிறக்கினர்.
பின்னர் விமானத்தில் தீவிர பரிசோதனை நடத்தினர். அதன் இறுதியில் விமானத்தில் இருந்த 12 இந்தியர்களை (அனைவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்) கைது செய்தது ஆலந்து போலீஸ். அவர்களை 2 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்திய பின்னர் அனைவரும் அப்பாவிகள் என்று தெரிய வந்ததால் விடுதலை செய்தனர்.
விடுவிக்கப்பட்ட 12 பேர் மற்றும் அந்த விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் நேற்று நள்ளிரவு மும்பை வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதற்கிடையே, ஆலந்து நாட்டு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆலந்து நாட்டின் தூதர் எரிக் நீச், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்திய பயணிகளிடம் ஆலந்து போலீஸார் நடந்து கொண்ட விதம் கடும் அதிருப்தி அளிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சசி திரிபாதி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை சீர்குலைக்கும் விதமாக 12 இந்தியர்களையும் ஆலந்து போலீஸார் நடத்தியுள்ளனர் என்றார்.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், இதுகுறித்து ஆலந்து தூதரிடம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். இது போன்ற சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலந்து தூதர் வருத்தம் தெரிவித்தார் என்றார் சர்மா. மேலும், இச்சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் ஆலந்து அரசிடம் இந்தியா கேட்டுள்ளது.
இதற்கிடையே, ஆலந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான முகம்மது இக்பால் பன்டிவாலா என்பவரின் மனைவி மும்பை விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆலந்து போலீஸாரின் விசாரணைக்கு நாங்கள் தயாராக இருந்தோம். எந்த மாதிரியான விசாரணையை அவர்கள் மேற்கொண்டாலும் அதற்கு முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருந்தோம்.
எந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டாலும் அதை சந்திக்க இப்போதும் கூட நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.