அரியலூர் அருகே மரபணு நோயில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடும் பெற்றோர்…!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் பழனிச்சாமி (38), கூலித் தொழிலாளி. இவர் தனது சொந்த சகோதரியின் மகள் ஷர்மிளா என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு சத்தீஸ்வரி (12), விசால் (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் அவர்கள் 3 வயது முடிவடைந்து 4-வது வயது துவங்கும்போது அவர்களின் உடல்களில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளுக்குமே கால்கள் வளைந்து, நெஞ்சுக் கூடுகள் சுருங்கியும் காணப்பட்டன.
இதுகுறித்து மருத்துவர்களிடம் சென்று காண்பித்த போது சொந்த சகோதரியின் (ரத்த சொந்தம்) மகளை திருமணம் செய்துகொண்டதால், பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு கோளாறுகள் வரும் எனவும், இதுபோன்ற ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் மருத்துவர்களிடம் சென்று உறவு முறையில் திருமணம் செய்து கொண்டதை தெரிவித்து வயிற்றில் வளரும் குழந்தையை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
அப்போது உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டால் மட் டுமே இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும், சிகிச்சையின்றி பிறக்கும் குழந்தைகளுக்கு 4 வயதுக்கு பின்னர் டி.என். ஏ. பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும் கூறுகையில் இவ்வாறான பாதிப்புகள் லட்சத்தில் சிலருக்குத்தான் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூலித்தொழிலாளியான பழனிச்சாமி தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக பல வகையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தனது உழைப்பாலும், சிலரது உதவியாலும் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது இளைய மகன் விசாலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் தனது மகள் சக்தீஸ்வரிக்கு சிகிச்சை அளிக்க பணமின்றி தவித்து வருகிறார். எனவே, தமிழக அரசு சம்மந்தப்பட்ட துறையின் மூலம் தனது குழந்தைகளை காப்பாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating