மொட்டை மாடியில் பேசிகொண்டிருந்தபோது செல்போனில் தீப்பிடித்து மாணவன் பலி…!!
பெங்களூரை சேர்ந்தவர் ராஜேஷ். விமான படை முன்னாள் ஊழியர். இவரது மகன் அபினாஷ் (வயது 15). 10-ம் வகுப்பு மாணவன்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான புதுவையை அடுத்த ஆரோவில் அருகே உள்ள கலைவாணன் நகருக்கு வந்தார்.
அபினேஷ், பகலில் மாடியில் நின்று ஆன்ட்ராய்டு போனில் பேசி கொண்டிருந்தார். திடீரென அந்த செல்போனில் தீப்பிடித்தது. இதனால் அபினாஷ் தனது கையை உதறியபோது, அந்த போன் அவரது சட்டையில் விழுந்தது. அடுத்த வினாடிகளில் அபினாஷின் உடையில் தீப்பிடித்தது.
இதில் உடல் கருகியதால் அவர் அலறினார். அந்த சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் பதறியடித்து கொண்டு மொட்டை மாடிக்கு ஓடி வந்தனர்.
அபினாஷ் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை மீட்டு, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அபினாஷ் பரிதாபமாக இறந்தார்.
ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் வழக்கு பதிவு செய்து, செல்போனில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating