நடிகை ரம்பா கோர்ட்டில் ஆஜராக போலீஸ் சம்மன்..!!
தமிழ் பட உலகில் 1990 முதல் 2000-ம் ஆண்டுவரை முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி, காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.
ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரனுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர் கனடாவில் குடியேறினார். தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். ரம்பாவின் சகோதரர் வாசுவின் மனைவி பல்லவி ஐதராபாத்தில் வசிக்கிறார்.
இவர் ஏற்கனவே ரம்பா மீதும், வாசு மீதும் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி கோர்ட்டில் வரதட்சணை கேட்டு தன்னை இருவரும் கொடுமைப்படுத்துவதாகவும் இதனால் கடந்த சில வருடங்களாக தனியாக வசித்து வருவதாகவும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரம்பா மீதும், அவரது அண்ணன் வாசு மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி ஐதராபாத் பன்சாரா ஹில்ஸ் போலீசுக்கு உத்தரவிட்டது.
வாசு இது பொய் வழக்கு என்று மறுத்தார். மனைவியும் நானும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம். ரம்பா திருமணத்துக்கு பிறகு கணவருடன் கனடாவில் வசித்தார். அவர் எப்படி வரதட்சணை கேட்டு என் மனைவியை கொடுமைப்படுத்தி இருக்க முடியும்? இந்த புகாரில் உண்மை இல்லை என்று அவர் கூறினார்.
ஆனாலும் இருவர் மீதும் கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரம்பா கனடாவில் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக ரம்பா ஐதராபாத் வந்து இருந்தார். அவர் ஐதராபாத் வந்த தகவல் அறிந்ததும் வரதட்சணை கொடுமை வழக்கில் உடனடியாக கோர்ட்டில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Average Rating