பேஸ்புக்’ தோழிகளிடம் அந்தரங்க தகவல்களை பகிர்ந்த மனைவி கொலை சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை..!!
புனேயில் பேஸ்புக் தோழிகளிடம் அந்தரங்க தகவல்களை பகிர்ந்த ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை இல்லை
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹடப்சர் மாஞ்சரிபார்ம் ரோட்டில் உள்ள சிவ்பார்க் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தவர் ராகேஷ்(வயது35). இவரது மனைவி சோனாலி(31). இந்த தம்பதியின் சொந்த ஊர் நாசிக் மாவட்டம் ஆகும். திருமணத்திற்கு பிறகு 2 பேரும் புனேயில் வசித்து வந்தனர். ராகேஷ் புனேயில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆன போதும் ராகேஷ், சோனாலி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. எனவே அவர்கள் இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
செல்போனை எடுக்கவில்லை
இந்தநிலையில் சோனாலியின் தாய் கடந்த புதன்கிழமை மகளின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சோனாலி அழைப்பை எடுத்து பேசவில்லை. மருமகன் ராகேசும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மகனை புனேயில் உள்ள சோனாலியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில் அவர் புனே வந்து பார்த்தபோது, சோனாலியின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.
கணவன், மனைவி உடல்
எனவே அவர் இதுகுறித்து ஹடப்சர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் சோனாலி பிணமாக கிடந்தார். மேலும் ராகேஷ் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, போலீசார் ராகேசின் சட்டை பையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாவது:-
பேஸ்புக் பேச்சு
எனது மனைவி எப்போது பார்த்தாலும் சமுக வலைதளங்களில் தோழிகளிடம் பேசிக்கொண்டு இருப்பார். இந்தநிலையில் அவர் எங்களுக்கு குழந்தை பிறக்காததை பற்றியும், எங்கள் அந்தரங்கங்களை பற்றியும் பேஸ்புக் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொலை செய்து, கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating