ராஜஸ்தானில் தண்ணீர் தொட்டி உடைந்து 47 பேர் பலி
Read Time:1 Minute, 17 Second
ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாயினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தானில் வரலாறு காணாத மழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் 130 பேர் வரை பலியாகிவிட்டனர். இந்நிலையில் ஜெயப்பூரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் பாரத்பூர் மாவட்டத்தில் காமா என்ற இடத்தில் மல்யுத்தப் போட்டி நடந்தது. இதைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.
நூற்றுக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி உட்கார்ந்து போட்டியை ரசித்தனர். அப்போது பளு தாங்காமல் அந்தத் தொட்டி உடைந்து கீழே விழுந்தது.
இதில் தொட்டியோடு சேர்ந்து கீழே விழுந்தும், காங்க்ரீட் இடிபாட்டில் சிக்கியும் 47 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.