“காகிதப் பூக்கள்”.. புத்தம் புதிய நெடுந்தொடர் – அத்தியாயம் 1
(சென்னையில் இருந்து 200கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ளது கூவாகம் எனும் ஊர். சித்ரா பெளர்ணமி அன்று உலக கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் கூவாகம் அர்ஜீனின் மகனான அரவான் என்பவர்தான் இங்கு கூத்தாண்டவராக எழுந்தருளி தன்னை மானசீக கணவனாக வணங்கும் அரவாணிகளுக்கு அருள் பாலித்து வருகிறார்) அன்று வந்த கடிதங்களைப் படித்து அதற்கு பதில் குறிப்புகள் தயார் செய்து கொண்டு இருந்தான் கவின்.
ஆபீஸீல் ஏறத்தாழ எல்லோரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அவன் கைபேசி அழைத்தது. டிஸ்பிளேயில் மனைவி வித்யாவின் புன்னகை ததும்பும் முகம். கவினும், வித்யாவும் காதல் மணம் புரிந்தவர்கள். அளவில்லாத சொத்து சுகம் இத்தனை இருந்தும் மணமாகி ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை. வேண்டாத கோயில்களும் ஏறாத மருத்துவமனைகளும் இல்லை! கடைசியில் கடவுளின் அருளோ அல்லது மருந்துகளின் உபயோகமோ அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள் வித்யா.
இழந்த சந்தோஷம் மீண்டுவந்தது. கூடவே இடியாய் செய்தியும்.! வித்யாவின் கருப்பைக்கு மற்றொரு குழந்தையைத் தாங்கும் அளவிற்கு சக்தி இல்லையென்பதால், அதை எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிட கவினும் ஒப்புக்கொண்டான். மகன் ஜீவன் வளர வளர சந்தோஷமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தது. அவனின் மழலை மொழியும் நிற்கும் போதும், நடக்கும்போதும், ஒவ்வொரு செயலுக்கும் மகிழ்ந்தார்கள். கராத்தே, நாட்டியம், நீச்சல் என அவன் விரும்பும் பயிற்சிகளைத் தந்தார்கள்.
இன்று அவனுக்கு டிராயிங் கிளாஸ். முடிந்தவுடன் டிரைவின் கூட்டிப்போவதாய் சொல்லி இருந்தான் கவின். அதை நினைவுபடுத்திடத்தான் இந்த போன் போலும். சிரிப்புடன், இன்னும் கிளம்பலையா ? என்று கேட்டு தாயிடமும், மகனிடமும் அர்ச்சனையை எதிர்பார்த்தபடியே, எடுக்கலாமா ? இல்லை கிளம்பலாமா? என்று சில நிமிட யோசனைக்குப்பிறகு, அலைபேசியை உயிர்ப்பித்தான் கவின்,
“ஹலோ…….!” “என்னங்க…” வித்யாவின் குரலில் பதட்டம்?! “வந்துட்டேன் வித்யா….இன்னும் அரைமணிநேரம் …”. “ஏங்க,.,,, நம்ம ஜீவன் இன்னமும் வீட்டுக்கு வரலை ! டிரைவர் எண்ணிற்குப் போன் பண்ணினா ரிங் போயிட்டே இருக்கு ? எனக்கு பயமாயிருக்குங்க?” “ஏய்! ஏதாவது வேலையிருந்திருக்கும்,,,, இல்லேன்னா வழக்கம்போல ஏதாவது ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிப்போய் இருப்பான். கவலைப்படாதே நான் கோச்சிங் சென்டர் போய் விசாரிச்சிட்டு வந்திடறேன்” போனை வைத்தவுடன் இலேசாய் அவனுக்குமே பதட்டம்.
(தொடரும்)
Average Rating