தெற்கு லெபனானுக்கு துருப்புக்களை அனுப்ப துருக்கி முன்வருகிறது
தெற்கு லெபனான் பகுதியில் விரிவுபடுத்தப்படவுள்ள ஐ நா வின் அமைதி காக்கும் படைகளுக்கு தமது நாட்டுத் துருப்புக்களை அளிக்க கொள்கை ரீதியில் தயாராக உள்ளதாக துருக்கி கூறியுள்ளது. துருப்புக்கள அனுப்புவது குறித்த இந்த முடிவு விரிவான அளவில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும், இது குறித்து விவாதிக்க விரைவில் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் அந்நாட்டின் அரசின் சார்பில் பேசவல்ல செமில் செசிக் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டிற்கு அருகில் நடக்கும் விடயங்களை துருக்கி ஒரு வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் செசிக் மேலும் தெரிவித்துள்ளார். ஆனாலும் எவ்வளவு துருப்புக்கள் அனுப்பபடும், அவை எப்போது அனுப்பபடும் என்பது குறித்து அவர் எந்த விதமான அறிகுறிகளும் வெளியிடவில்லை.
நேட்டோ அமைப்பில் உள்ள ஒரே முஸ்லீம் நாடு துருக்கிதான் என்பதும் அது இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுடன் உறவுகளை கொண்டுள்ளது எனபதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் உள்நாட்டிலேயே அமைதி காக்கும் பணிக்கு துருப்புக்களை அனுப்புவது குறித்து எதிர்ப்பு உள்ளது. துருக்கி நாட்டின் அதிபர் அஹ்மத் நெக்டெட் செசாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.