தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு – ஆட்சி அமைக்க உரிமை கோரினார்..!!
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது. மேலும், அடுத்த பத்தாண்டு வரை அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை தீர்ப்பு வெளியானபோது கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த சசிகலா, மாற்று ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். அவரது முன்னிலையில், சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இதுபற்றி ஆளுநருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு அவரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி தந்தார். இதையடுத்து, மாலை 3.45 மணியளவில் கூவத்தூரில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திப்பதற்காக சென்னை புறப்பட்டார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 11 பேர் சென்னைக்கு வந்தனர்.
சரியாக மாலை 5 மணியளவில் அவர்களின் வாகனங்கள் கிண்டி கவர்னர் மாளிகையை வந்தடைந்தன. எடப்பாடி பழனிச்சாமி உள்பட மொத்தம் 12 பேரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது தொடர்பான கடிதத்துடன், தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
Average Rating