செங்கத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பலி..!!
செங்கம் புதுப்பட்டு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன்கள் மோனேஷ் (வயது 4), லோகேஷ் (2).
மோனேஷ் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். அவர் தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு செல்வார்.
வழக்கம் போல இன்று காலை மோனேஷை பள்ளி வேனில் ஏற்றி விடுவதற்காக அவரது தந்தை சரவணன் அழைத்து சென்றார். அவர் இளைய மகன் லோகேஷையும் உடன் அழைத்து சென்றார்.
பள்ளி வேன் வந்ததும் லோகேஷை கீழே நிறுத்தி விட்டு மோனேஷை சரவணன் வேனில் ஏற்றினார். அந்த நேரத்தில் மோனேஷ் பள்ளி வேனுக்கு அடியில் சென்றதாக தெரிகிறது.
இதை சரவணன் கவனிக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் ஏறியதும் பள்ளி வேனை டிரைவர் எடுத்தார். அப்போது வேனின் பின்பக்க சக்கரம் லோகேஷ் மீது ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி லோகேஷ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தனது கண் முன்னே மகன் உடல் நசுங்கி இறந்ததை பார்த்து சரவணன் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க செய்தது.
தகவல் கிடைத்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating