வடக்கு மோதல்களில் 16 விடுதலைப்புலிகள் பலி
இலங்கையின் வடக்கே இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 16 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மன்னார் வீதியில் பூவரசங்குளம் பிரதேசத்தில் உள்ள விமானப்படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவியதாகத் தெரிவிக்கப்படும் 16 பேர் கொண்ட விடுதலைப் புலிகளைப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பூரவசங்குளம் பகுதியில் இருந்து இந்த சடலங்களை வவுனியா பொலிஸார் எடுத்து வந்து இன்று பிற்பகல் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இந்தச் சடலங்களை வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் பார்வையிட்டு பொலிஸாரிடம் விசாரணைகளை நடத்தினார்.
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வவுனியா மாவட்ட பிரதிநிதி ஒருவரும் இந்தச் சடலங்களைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். இவர் பூவரசங்குளம் பகுதிக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொல்லப்பட்டவர்களின் உடைமையிலிருந்து துப்பாக்கிகள், புலிகளின் அடையாள இலக்கத் தகடுகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சடலங்கள் குறித்து போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
தமது ரோந்து அணியொன்று இரணை இலுப்பைக்குளம் மற்றும் நொச்சிக்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறும் விடுதலைப்புலிகள் சார்பில் பேசவல்ல இளந்திரையன், அதில் 7 பேர் இருந்ததாகவும், இதனைவிட தமது தரப்புக்கு அங்கு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.