திருமணமான ஒரு மாதத்தில் புதுப் பெண் ஓட்டம்; திருமணமான செலவுத் தொகையை கேட்ட மாமனார் அடித்துக்கொலை..!!
திருமணமான புதுப் பெண் ஒரு மாதத்தில் கணவனை விட்டு மாமன் மகனுடன் ஓடிய நிலையில், திருமணத்துக்கு செலவான பணத்தை திரும்பி கேட்கச் சென்ற மாமனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஓடிய தம்பதி உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் சேலம் குகை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பச்சியப்பன் (60). வளையல் வியாபாரி.
இவரது மகன் ஜெகநாதன் (28) இவருக்கும், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பக்கமுள்ள கஞ்சநாயக்கன் பட்டியை சேர்ந்த அனிதா (22) வுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஒரு மாதம் மட்டும் குடும்பம் நடத்திய நிலையில், அனிதா அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அவரது தாய்மாமன் மகன் லட்சுமணனுடன் ஓடிய அனிதா திருமணம் செய்து கொண்டு வேலூரில் குடும்பம் நடத்தி வருகிறார். லட்சுமணன் வேலூரில் ஆட்டோ சாரதியாக இருந்து வருகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதல் கணவரின் தந்தை பச்சியப்பன், திருமணத்துக்கு ஆன செலவு தொகையை கொடுக்குமாறு பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.
இதில் 40,000 ரூபாவை அனிதா தரப்பினர் கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர். ஆனால் இதுவரை பஞ்சாயத்தில் பேசியபடி பணத்தை கொடுக்கவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை லட்சுமணன், அனிதா தம்பதியினர் வேலூரிலிருந்து ஊருக்கு சென்றுள்ளதாக பச்சியப்பனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவர் நேற்று முன்தினம் மாலை கஞ்சநாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த லட்சுமணன், அனிதா, அவரது அண்ணன் சண்முகம் (24) ஆகியோரிடம் 40 ஆயிரத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதன்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் பச்சியப்பன் கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினமிரவு பச்சியப்பன் உயிரிழந்தார்.
இதனையடுத்து லட்சுமணன், அனிதா, சண்முகம் ஆகியோரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating