தன் மீது பரசுராமர் ஆவி வந்ததாக கூறி தாயின் தலையை துண்டித்து பூஜை செய்தவர் கைது..!!
சித்ரதுர்கா: தன் மீது பரசுராமர் ஆவி வந்ததாக கூறி மாலை அணிவித்து பூஜை செய்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுவின் அவதாரங்களில் பரசுராம அவதாரமும் ஒன்றாகும். இதில் பரசுராமர் தந்தையின் உத்தரவுப்படி தாயின் தலையை வெட்டினார்.
இதேபோன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. சித்ரதுர்கா மாவட்டம், தம்மியாளா தாலுகாவில் உள்ள ஒளகெரே போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கொட்டரஹட்டி ஹள்ளியைச் சேர்ந்தவர் திம்மராஜூ.
இவரது மனைவி, பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் திம்மராஜூ ஆதங்கத்தில் இருந்ததாகவும், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் திரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, திம்மராஜூ தன் தாயிடம் என் உடலில் பரசுராமர் வருவதாக உணர்கிறேன் எனக் கூறி வந்துள்ளார்.
புராணத்தில் ஒரு கட்டத்தில், பரசுராமர் தனது தாயின் சிரசை வெட்டி, பின் மீண்டும் உயிர்ப்பித்ததுபோல், ‘‘நானும் உனது சிரசை வெட்டி மீண்டும் உயிர்பிப்பேன்’’ என தாய் சாவித்ரியம்மாவிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்த திம்மராஜூ, அரிவாளை எடுத்துச் சென்று வீட்டில் தனியாக அமர்ந்திருந்த தாயின் தலையை பிடித்து ஒரே வெட்டாக வெட்டி சிரசை மட்டும் தனியாக எடுத்து ஒரு இடத்தில் வைத்து மாலை அணிவித்து பூஜை செய்துள்ளார்.
பின்னர், கத்தியுடன் அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். ஆனால், இவர் வழக்கம்போல் அங்குமிங்கும் செல்கிறாரோ என்று நினைத்து கிராம மக்கள் பேசாமல் இருந்துள்ளனர்.
ஆனால், சிலருக்கு மட்டும் சந்தேகம் எழுந்து சற்று நேரம் கழித்து வீ்ட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போதுதான் தாயின் சிரசை வெட்டி வைத்து அதற்கு மாலை அணிவித்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்த திம்மராஜூவை கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர். திம்மராஜூ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating