தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் – புலிகள் எச்சரிக்கை!
இலங்கையின் கிழக்குப் பகுதியில் தங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சம்பூர் பகுதியை கைப்பற்ற ராணுவம் நடத்திவரும் தாக்குதல் தொடர்ந்தால் அது இருதரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளியாகிவிடும் என்று புலிகள் எச்சரித்துள்ளனர்! திருகோணமலை துறைமுகத்தை அடுத்துள்ள சம்பூர் பகுதியை கைப்பற்ற திங்கட்கிழமை காலை முதல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
பீரங்கிகளைக் கொண்டும், எறிகணைகளை வீசியும் ராணுவம் தனது தாக்குதலை உக்கிரப்படுத்தி வருகிறது என்று கூறியுள்ள விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் இளந்திரையன், இரண்டு நாட்களாக நடந்துவரும் இந்த மோதலில் சிறிலங்க ராணுவத்தினர் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 108 பேர் காயமுற்றதாகவும் கூறியுள்ளார்.
இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 28 பேர் காயமுற்றதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார். ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் 90 பேர் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 71 பேர் காயமுற்றதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
“சிறிலங்க ராணுவம் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதல் தொடருமானால் அது 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருதரப்பினரும் கையெழுத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி ஆகிவிடும்” என்று இளந்திரையன் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, வவுனியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் காணவில்லை என்றும் இளந்திரையன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேரை தாங்கள் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அவர்களின் உடல்களை புலிகளிடம் அளிக்க செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் சிறிலங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
16 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதென புலிகளின் தமிழ்நெட் செய்தி கூறுகிறது.