நிலவின் மீது செயற்கைகோள் இன்று இரவு மோதுகிறது
3 ஆண்டுகளுக்கு முன் நிலவை நோக்கி பறக்கவிடப்பட்ட ஒரு செயற்கைகோள் நிலவின் மீது இன்று இரவு மோதுகிறது. இந்த அபூர்வ காட்சியை தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். நிலவில் என்ன என்ன கனிமவளங்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பதற்காக ஸ்மார்ட் -1 என்ற செயற்கைகோள் ஐரோப்பிய நாடுகள் சார்பாக கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைகோள் நிலவை சுற்றி 2000 முறை பறந்து பல்வேறு அதிசய தகவல்களை அனுப்பியது. அதன் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் இப்போது அந்த செயற்கைகோள் நிலவின் மீது மோதி தனது பயணத்தை முடிக்க இருக்கிறது.
இன்று(சனிக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 12 மணி அளவில் செயற்கைகோள் நிலவு மீது மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கைகோள் நிலவின் மீது மோதும் போது பெரிய தீப்பிழம்பு ஏற்படாது. காரணம் நிலவில் ஆக்சிஜன் இல்லை என்பது தான்.
ஆனாலும் செயற்கை கோள் மோதும் வேகம் காரணமாக நிலவின் பரப்பில் அதிக வெப்பம் ஏற்பட்டு அது வெளிச்சமாக தோன்ற வாய்ப்பு இருக்கிறது. நிலவின் தென்பகுதி இருளாக இருக்கும்போது செயற்கைகோள் மோத இருக்கிறது. எனவே அந்த வெளிச்சத்தை பூமியில் இருந்தபடி தொலை நோக்கி மூலம் பார்க்க முடியும்.
நிலவின் மீது எரிகற்கள் மோதினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை, செயற்கைகோள் மோதும் நிகழ்ச்சிமூலம் அறிந்து கொள்ளலாம் என்பதால் இன்று இரவு நடைபெறும் இந்த அரிய நிகழ்வை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.