20 ஆண்டுகால ஆட்டம் முடிவுக்கு வந்தது: கண்ணீர் விட்டபடி விடைபெற்றார் அகாசி
டென்னிஸ் உலகில் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர் ஆந்த்ரே அகாசி. 36 வயதாகும் அமெரிக்காவைச் சேர்ந்தவரான இவருக்கு அமெரிக்க ஓபனில் நேற்றைய ஆட்டம் இறுதியாக அமைந்தது. இந்த கிராண்ட் சிலாம் போட்டியில் ஓய்வுபெறப் போகிறேன் என்று முன்ன தாகவே அறிவித்து இந்த தொடரில் ஆடி வந்தார். அவர் தனது முதல் இரண்டு ஆட்டங்களிலுமே பரபரப்பான வெற்றியைக் கண்டார். 3-வது சுற்றில் நேற்று ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் பெக்கருடன் அகாசி மோதினார்.
இந்த ஆட்டத்தில் அவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 5-7, 7-6, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது அவரை மட்டுமல்ல மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அகாசியின் மனைவி ஸ்டெபிகிராப் உள்பட அனைவரையும் கண்ணீர் விட வைத்து விட்டது.
1986-ம் ஆண்டு டென்னிஸ் உலகில் பிரவேசித்த அகாசி 8 கிராண்ட் சிலாம் பட்டங்கள் உள்பட 60 ஒற்றையர் பட்டங்களை வென்று குவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய கிராண்ட் சிலாம் போட்டிகளில் பட்டம் வென்ற 5-வது வீரர் என்ற பெருமைக்குரியவர் அகாசி.
அவர் ஆடிய ஆட்டங்களில் 868-ல் வெற்றி கண்டுள்ளார். மூன்றுமுறை டேவிஸ் கோப் பையை தனது நாட்டிற்காக வென்று கொடுத்துள்ளார். பலமுறை தொடர்ந்து உலகின் முதல்நிலை வீரராக நீடித்து உள்ளார். கடந்தமுறை (2005) அமெரிக்க ஒபனில் சுவிட்சர் லாந்து வீரர் ரோஜர் பெடரரிடம் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு `சாம்பியன்’ கோப்பையை தவற விட்டார்.
அதன்பிறகு முதுகுவலியால் அவதிப்பட்ட அவர் அதிலிருந்து குணம் அடைந்து போட்டிகளில் விளையாடி வந்தார். கடந்த ஜுன் மாதம் அமெரிக்க ஓபன் போட்டியுடன் விடைபெறப் போவதாக அறிவித்தார். கோப்பையுடன் தனது டென்னிஸ் சகாப்தத்தை முடித்து விட வேண்டும் என நினைத்த அகாசிக்கு சற்று ஏமாற்றம் கிடைத்து விட்டது.
நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டதும் கண்ணீர் மல்க அவர் விடைபெற்றது ரசிகர்களின் மனதை சற்று தடுமாறச் செய்தது. அவர் ஓய்வு பெற்றாலும் 20 ஆண்டுகால அவருடைய டென்னிஸ் சகாப்த ஆட்டம் ரசிகர்களின் மனதில் `ஆட்டோகிராப்’ ஆக என்றும் நிலைத்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது.