சந்திரன் மீது விண்கலம் மோதியது: பூமிக்கு ஆபத்தா… பரபரப்பு தகவல்கள்
சந்திரனில் உள்ள இயற்கை மற்றும் கனிம வளங்களை கண்டறிய 3 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய கூட்டமைப்பு ஸ்மார்ட் _ 1 என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. இந்த செயற்கைக்கோள் சந்திரனில் உள்ள தாதுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் குறித்து பூமிக்கு ஏராளமான படங்களை அனுப்பியது.
இந்த படங்களின் மூலம் சந்திரனின் தாது வளம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பூமியில் கிடைக்கும் சில கனிமங்கள் சந்திரனில் கிடைப்பது தெரிய வந்ததும் விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர்.
இந்நிலையில் இந்த செயற்கைக்கோள் செயலிழந்து சுற்று வட்டப் பாதையையும் மீறி இயங்க ஆரம்பித்தது. பயனற்றுப்போன அந்த செயற்கைக்கோளை சந்திரன் மீது மோத வைத்து, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.
இதையடுத்து தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோளை சந்திரனின் சுற்று வட்டப்பாதை அருகே நிலை நிறுத்தினர். பின்னர் மணிக்கு 7 ஆயிரத்து 200 கி.மீ., வேகத்தில் அந்த செயற்கைக்கோளை சந்திரன் மீது மோத வைக்க, தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மதியம் இந்த செயற்கைக்கோள் சந்திரன் மீது மோதியது. இதனால் 3 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் ராட்சத பள்ளம் ஒன்று உருவானது. இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சந்திரன் மீது செயற்கைக்கோள் மோதியதால் பூமிக்கோ சந்திரனுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று இந்தியாவைச்சேர்ந்த மூத்த வானியல் வல்லுனர் ஒருவர் தெரிவித்தார்.
சந்திரனில் எத்தனையோ பள்ளங்கள் இருக்கின்றன. அதில் பத்தோடு பதினொன்றாக இந்த பள்ளமும் சேர்ந்து விடும், அவ்வளவுதான் என்று அவர் தெரிவித்தார்.