தாய் கண் முன்பு பாலியல் பலாத்காரம்: கலெக்டர் ஆபீசில் விஷம் குடித்த மாணவிக்கு தீவிர சிகிச்சை..!!
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவி. இவர் நேற்று தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சாக்லேட் வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை கேட்டதால் அவர் ஆடியாட்களை வைத்து எங்களை மிரட்டி தாக்கினார். அதை தடுத்த எனது தம்பியை வெட்டினர். இதில் அவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் (நேற்று முன்தினம்) வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துவிட்டு அரக்கோணத்திற்கு சென்றோம். அங்கு பஸ்நிலையத்தில் இறங்கியதும் 7 பேர் கும்பல் ஒன்று என்னையும், எனது தாயையும் காரில் கடத்தி சென்று சோளிங்கர் செல்லும் வழியில் வைத்து என்னை எனது தாயார் கண்முன்பே பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த புகார் மனுவை மாணவியின் பெற்றோர் கலெக்டரிடம் கொடுப்பதற்காக சென்றிருந்தனர். இந்த நேரத்தில் மாணவி தான் கொண்டு வந்திருந்த விஷத்தை திடீரென குடித்து விட்டார்.
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மாணவி வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating