வைரலாகும் ஒன்றாம் வகுப்பு மாணவியின் வீடியோ..!!
அரசுப்பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரும் வழியில் உள்ள கட்டளை கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
இங்கு ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் காவ்யா.
ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு, தன் மழலைக் குரலால் தெளிவான உச்சரிப்போடு ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார். பின் A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துகளை எழுதுகிறார். அடுத்து, அவ்வெழுத்துகளைச் சரியான முறையில் உச்சரிக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், ஆச்சர்யமடைவதோடு காவ்யாவுக்கு வாழ்த்துகளையும் பரிமாறி வருகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியால், அதுவும் பள்ளித் தொடங்கி இரண்டு மாதங்கள்கூட இன்னும் முடிவடையாத நிலையில் எப்படி இது சாத்தியமானது என்பது பலரின் கேள்வியாக இருந்தது.
இதற்கு பதிலளித்த அப்பள்ளியின் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் ச.சுகதேவ், காவ்யாவின் பெற்றோர் கூலி வேலை பார்ப்பவர்கள். இவர்கள் வேலைக்கு சென்றுவிடுவதால் மூன்றாம் வகுப்பு படிக்கும் காவ்யாவின் அக்காவோடு சேர்ந்து இவளையும் பள்ளியில் வந்து அவர்களது பெற்றோர் விட்டுவிடுவார்கள்.
காவ்யாவுக்கு நான்கு வயதுதான், ஒன்றாம் வகுப்பில் அவள் ஓரமாக அமர்ந்திருப்பாள், அவளை படிக்க சொல்லி வற்புறுத்தமாட்டேன், ஆனால் நான் எடுக்கும் பாடங்களை நன்றாக கவனிப்பாள்.
தூக்கம் வந்தால் தூங்கி விடுவாள், மற்ற மாணவர்கள்கூட வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டு வந்திருப்பார்கள். ஒரு நாள்கூட காவ்யா வீட்டுப் பாடம் செய்ய மறக்க மாட்டாள்.
தற்போது காவ்யா ஒன்றாம் வகுப்பில் முறையாக சேர்ந்துள்ளாள், அவளின் ஆர்வம் அதிகரித்துள்ளது, பொனெடிக் முறையில் ஆங்கில உச்சரிப்பை விரைவாகக் கற்றுக்கொண்டாள். அதை வீடியோவாக எடுத்துப் பதிந்தேன் என்று கூறியுள்ளார்.
Average Rating