செங்கத்தில் மாமியாரை கொன்று விட்டு மருமகளை கற்பழித்து கொலை செய்த வாலிபர் கைது..!!
செங்கம் பக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் அஸ்மத்பீ (வயது 80). இவரது மகன் யூனிஷ்கான் (55). பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். யூனிஷ்கான் மனைவி தில்ஷாத் (45). தில்ஷாத் தனது மாமியார் அஸ்மத்பீயுடன் பக்கிரிபாளையத்தில் வசித்து வந்தார்.
கடந்த 17-ந்தேதி காலையில் வீட்டில் மாமியாரும், மருமகளும் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தனர். மேற்கூரை ஓடுகளை பிரித்து கொலையாளி வீட்டுக்குள் குதித்து கொலை செய்துள்ளான்.
செங்கம் போலீசார் 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ரவி (25) என்பவர் அஸ்மத்பீயையும், தில்ஷாத்தையும் கொலை செய்ததாக பக்கிரிபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.
பின்னர் அவர், செங்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து போலீசார், ரவியை கைது செய்தனர்.
போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரவி கூறியிருப்பதாவது:-நான் தேங்காய் நார் உரிக்கும் வேலை செய்து வருகிறேன். எங்களது வீட்டின் அருகே தில்ஷாத்தின் வீடு உள்ளது. அவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் அவரை அடைய நான் திட்டமிட்டேன்.
கடந்த 16-ந் தேதி இரவு 10 மணி அளவில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறியது. போதையில் தில்ஷாத்தை கற்பழிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனே அவரது வீட்டிற்கு சென்றேன். வீடு பூட்டி இருந்தது. இதனால் வீட்டின் மீது ஏறி மேற்கூரையில் இருந்த ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கினேன். சத்தம் கேட்டு தில்ஷாத்தின் மாமியார் அஸ்மத்பீ எழுந்து வந்தார். அவர் சத்தம் போட முயன்றார். இதனால் அவரை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
பின்னர் தில்ஷாத்தை கற்பழிக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டார். அப்போது தில்ஷாத்தின் கழுத்தை கையால் இறுக்கினேன். இதனால் அவர், மூச்சு, பேச்சு இல்லாமல் மயங்கினார்.
பின்னர் மயங்கிய நிலையில் இருந்த தில்ஷாத்தை கற்பழித்தேன். அப்போது தில்ஷாத் பரிதாபமாக இறந்து போனார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ரவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating