அல்-கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு தொடர்பு இல்லை அமெரிக்க செனட் கமிட்டி பரபரப்பு தகவல்
அமெரிக்காவில் நிïயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி தீவிரவாதிகள் விமானங்களை கட்டிடங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். சுமார் 3 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த சோக சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நாளை(11-ந் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க செனட் கமிட்டி நேற்று முன்தினம் 400 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் ஈராக் போர் தொடங்குவதற்கு முன்பு சதாம் உசேன், அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்பு வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தனது ஆட்சிக்கு மிரட்டல்கள் ஏற்படலாம் என்று சதாம் உசேன் அச்சம் அடைந்து இருந்ததும் உளவு துறை ஆய்வில் தெரியவந்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஈராக் மீது தவறான தகவல் அடிப்படையில் போர் தொடுத்ததாக அதிபர் ஜார்ஜ் புஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செனட் கமிட்டி அறிக்கையும் அதை நிரூபிக்கும் வகையில் இருப்பதால் அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சை உருவாகிறது.