நடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள்..!! (வீடியோ)
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது காற்று சீராக்கி (AC) வேலை செய்யாததால் விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவின் மதினா நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி , சவுதி எயார்லைன்ஸ் விமானம் SV -706 கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது.
ஹஜ் புனிதப் பயணத்தினை முடித்து விட்டு நாடு திரும்பும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்தோர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள காற்று சீராக்கி (AC) திடீரென செயற்படாமால் நின்று விட்டது.
இதன் காரணமாக விமானத்தினுள் திடீரென்று வெப்ப நிலை அதிகரித்தது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கையில் கிடைத்த காகிதக் கற்றைகளைக் கொண்டு அனைவரும் காற்று வீசத் தொடங்கினர். வயதானவர்கள் சிலர் வெப்பம் காரணமாக மயங்கிச் சரிந்துள்ளனர்.
விமானம் புறப்படும் போதே காற்று சீராக்கி சரியாக வேலை செய்யாததைக் கண்ட பயணிகள் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
அது சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சரிசெய்யப்படாமல் விமானம் புறப்பட்டதாக பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் .
கடும் சிரமங்களுக்குப் பிறகு அந்த விமானம் தரையிறங்கியுள்ளது.
குறித்த விமானத்திலிருந்து பயணி ஒருவர் எடுத்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
Average Rating