ராமேஸ்வரம் மீனவர்களுக்காக உருவான ‘மீனாய் இவன்’…!!
மீனவர்களுக்காக ‘மீனாய் இவன்’ என்ற தலைப்பில் குறும்படம் ஒன்று தயாராகி இருக்கிறது.
சினிமாவில் இயக்குனராக கால்பதிக்க இன்றைய இளைஞர்கள் பல்வேறு விதங்களில் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். அதில் குறும் படம் தயாரித்து தங்கள் திறமையை வெளிப்படுத்துவது ஒன்று.
இந்த முயற்சியில் இறங்கி இருக்கும் இளைஞர் அய்யனார். மீனவர்களின் நலனுக்காக குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்காக ‘மீனாய் இவன்’ என்ற குறும் படத்தை எடுத்துள்ளார். இதுபற்றி கூறிய அய்யனார்..
“தமிழக மீனவர்கள் பிரச்சினை 1974-ல் தொடங்கி 43 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை முதல் தனுஷ்கோடி, ராமேஸ்வரம், கச்சத்தீவு வரை சென்று இந்த குறும் படத்தை எடுத்தோம். கச்சத்தீவு அருகில் அமைந்துள்ள இந்தியா – இலங்கை சர்வதேச கடல் எல்லையை காட்ட வேண்டும் என்பதற்காக பாம்பன் மீனவர்களின் உதவியுடன் கச்சத்தீவு வரை கடலில் 27 கிலோ மீட்டர் பயணம் செய்து இதை படம் பிடித்தோம். இது சவால் நிறைந்த பயணம். இதன் மூலம் மீனவர்களின் தினசரி சவால்களை அறிந்தோம்.
இந்த குறும் படம், சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு மீனவரின் மகன் வளர்ந்து மீனவர்களுக்காக போராடத் தொடங்கும் கதை கருவை கொண்டது. 18 ஒளிப்பதிவாளர்களை கொண்டு படமாக்கினோம். இது பலமான கதை மட்டுமல்ல, மீனவர்களுக்கு பலம் சேர்க்கும் கதை” என்றார்.
Average Rating