பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்..!!
திருப்பத்தூர் தாலுகா ஏலகிரிமலை கொட்டையூரை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 15 வயது மாணவி நரியம்பட்டு சங்கராபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த 2005-ம் ஆண்டு வந்துள்ளார்.
அதே பகுதியில் தர்மலிங்கம் (வயது 36) என்ற தச்சுத்தொழிலாளி வசித்து வருகிறார். அப்போது தர்மலிங்கத்துக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களில் தர்மலிங்கம், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதையடுத்து மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தர்மலிங்கத்திடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர் 15 பவுன் நகை போட்டால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி உள்ளார். அதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மதுசூதனன், பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
மேலும் ரூ.10 ஆயிரம் அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் தர்மலிங்கம் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் தர்மலிங்கத்தை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிப்ரியா ஆஜரானார்.