விவசாயிகளின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் விஜய்யின் அடுத்த படம்..!!
விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கத்தில் வந்துள்ள இந்த படத்தில் மருத்துவ முறைகேடு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்ற பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்த படம் பற்றி அரசியல் வாதிகள் மட்டத்திலும் பேசப்பட்டது. பலதடைகளை தாண்டி வந்த ‘மெர்சல்’ படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் சமூக பிரச்சினைகளை சொல்லும் படமாக அமைந்தன. அவை வெற்றியும் பெற்றன.
இந்த வரிசையில் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் விஜய்யின் புதிய படமும் மக்கள் பிரச்சினையை சொல்லும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள்? விவசாயத்தை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய கருத்துக்கள் புதிய படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ஒருவர் விவசாயி. மற்றவர் மாற்றுத்திறனாளி என்று சொல்லப்படுகிறது. இது விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் இளைஞனின் கதையாக உருவாகிறது.
Average Rating