பாக்தாத் நகர் முழுவதும் கிடந்த 65 பேரின் உடல்கள் போலீஸ் கண்டுபிடித்து அகற்றியது
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் பல பகுதிகளில் சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்ட 65 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். பாக்தாத்தில் இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 65 பேர் உடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றில் பெரும்பாலானவை சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தான் கிடந்தன.
எல்லா உடல்களிலும் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அதன் பிறகு அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு கொண்டுவந்து போடப்பட்டிருக்கவேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். தீவிரவாதிகள் அல்லது சன்னி முஸ்லிம்கள் அல்லது ஷியா முஸ்லிம்கள் ஆகியோர் வைத்து இருக்கும் மரணப்படை தான் இந்த கொலைகளை செய்து இருக்கவேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள்.
இந்த மரணப்படை ஆட்களை கடத்தி வந்து அடித்து உதைத்து சித்ரவதை செய்து, பிறகு கொன்று இருக்கவேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
2 பேர் அமெரிக்கர்கள்
கொல்லப்பட்டவர்களில் 2 பேர் அமெரிக்க வீரர்கள். மற்றவர்களில் 45 பேர் உடல்கள் சன்னி முஸ்லிம்களின் மேற்கு பாக்தாத் நகரிலும், மீதிப்பேர் உடல்கள் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் கிழக்கு பாக்தாத்திலும் கிடந்தன. சுவய்ரா என்ற இடத்தில் டைக்ரீஸ் ஆற்றில் 5 பேர் உடல்கள் மிதந்தன. கொல்லப்பட்டவர்களின் அடையாளம் தெரியவில்லை.
சன்னி-ஷியா முஸ்லிம் இன மோதல் காரணமாக இவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த கார் குண்டு தாக்குதலில் பாக்தாத் போக்குவரத்து போலீஸ் தலைமை நிலையத்துக்கு வெளியே 19 பேர் பலியானார்கள். 62 பேர் காயம் அடைந்தனர்.