வவுனியாவில் புலிகளின் மனித வெடிகுண்டு வெடிப்பு: 12 போலீசார் பலி
வவுனியாவில் இன்று காலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பெண் போலீஸார் உள்பட 12 போலீஸார் கொல்லப்பட்டனர். 19 போலீஸார் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். அங்குள்ள காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று காலை 7.10 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. அப்போது போலீஸார் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த புலி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 3 பெண் போலீஸார் உள்பட 12 போலீஸார் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. போலீஸாரைக் குறி வைத்தே இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில் 19 பேர் போலீஸார் ஆவர். சம்பவம் நடந்தபோது முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இல்லை. காயமடைந்தவர்கள் வவுனியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பள்ளிக்கூட மாணவி ஒருவரும் அடக்கம்.
Average Rating