தி.மு.க-பா.ம.க உறவு முறிவு பற்றி காங்கிரஸ் கருத்து
தி.மு.க-பா.ம.க உறவு முறிவு குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி நீக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தி.மு.க. எடுத்துள்ள இந்த முடிவால், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று, காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் இதுபற்றி கூறியதாவது:- “ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போற்றுதலுக்குரிய தலைவராக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி விளங்குகிறார். அவருடைய தலைமையிலான தி.மு.க. கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்ற மேற்கொண்ட முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். தமிழக அளவில் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்றினாலும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று பா.ம.க.வுக்கு தி.மு.க. தலைமை எந்த ஒரு நிர்ப்பந்தமும் கொடுக்கவில்லை. எனவே, தமிழகத்தை தொடர்ந்து தேசிய அளவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடிப்பது குறித்து அனைத்து தோழமை கட்சிகளுடன் ஆலோசித்தபின், கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி முடிவு செய்வார்.” இவ்வாறு ஜெயந்திநடராஜன் கூறினார்.
Average Rating