கத்தார் நாட்டு தீ விபத்தில் ஐந்து இலங்கையர்கள் பலி
மத்திய கிழக்கு பகுதியிலுள்ள கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். புதன்கிழமை இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது என்று தோஹாவிலிருக்கும் இலங்கைக்கான பதில் தூதுவர் தர்மகுலசிங்கம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இறந்தவர்களின் உடல்கள் தற்போது கத்தார் மருத்துவமனை ஒன்றில் இருக்கின்றன எனவும், பிரேதப் பரிசோதனைகளும் புலன் விசாரணைகளும் நடைபெற்று வருவதாகவும் தர்மகுலசிங்கம் அவர்கள் கூறினார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகுதான் பலியானவர்களின் உடல்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்த தகவல்கள் தெரிய வரும் எனவும் அவர் மேலும் கூறினார்.
Average Rating