கனடாவின் தீர்மானத்துக்கு இலங்கை அரசு நன்றி!
கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த உலகத் தமிழர் இயக்கத்தை தடைசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மாணத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாகவும் அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 19ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கனடாவில் இயங்கிவந்த உலகத் தமிழர் இயக்கம் புலிகளுக்கு நிதி உட்பட பல்வேறு வகைகளிலும் உதவியளித்து வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவ்வியக்கத்தை தடை செய்வதற்கு கனேடிய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மாணம் வரவேற்கத்தக்கதாகும் எனக் கூறியுள்ளார். இதேவேளை இந்த இயக்கத்தை தடைசெய்ய கனேடிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையிட்டு அந்நாட்டு அரசாங்கத்துக்கு அங்கு வாழும் இலங்கையர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக கனேடிய இலங்கை மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ள புலிகளால் நாளாந்தம் அச்சுறுத்தப்பட்டு நெருக்குதல்களுக்கு உட்பட்டு வரும் கனடாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating