நேபாள அரசில் யாருக்கு எந்தப் பதவி?: தலைவர்கள் ஆலோசனை
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசில் யாருக்கு எந்தப் பதவியை வழங்குவது என்பது தொடர்பாக அரசியல் தலைவர்கள் சனிக்கிழமை கூடி ஆலோசித்தனர். காத்மாண்டில் வெள்ளிக்கிழமை நடந்த ஏழுகட்சிக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், மாவோயிஸ்ட் அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர். பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரதமர் இல்லத்தில் உயர்நிலைத் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஜலநாத் கன்னா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். புதிய அரசில், பிரதமர், அதிபர், அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளை காங்கிரஸ், யு.எம்.எல்., மாவோயிஸ்ட் ஆகியவை பகிர்ந்து கொள்வது குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. அதிகாரம் மிக்க பிரதமர் பதவி மாவோயிஸ்டுகளுக்குச் சென்றால், அதிபர் பதிவியை காங்கிரஸýம், அரசியல் நிர்ணய சபைத் தலைவர் பதவியை யு.எம்.எல் கட்சியும் பகிர்ந்து கொள்ளும் எனக் கூறப்படுகிறது. எனினும், மாவோயிஸ்ட் தலைவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்திய பிறகே, அதிகாரப் பங்கீடு குறித்துப் பேசப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரகாஷ் மான் சிங் தெரிவித்தார். 601-உறுப்பினர் நாடாளுமன்றத்தில் (அரசியல் நிர்ணயசபை) மாவோயிஸ்ட் கட்சிக்கு 220 உறுப்பினர்களும், காங்கிரஸýக்கு 110 உறுப்பினர்களும், யு.எம்.எல். கட்சிக்கு 103 உறுப்பினர்களும் இருக்கின்றனர்.
தனிப் பெருங் கட்சியாக மாவோயிஸ்டுகள் உருவெடுத்திருக்கும் நிலையிலும், அதிகாரப் பங்கீட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கலால், தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் இன்னும் அரசு அமைப்பதில் இழுபறிநிலை நீடித்து வருகிறது.
அதிபர் தேர்வானதும் பதவி விலக கொய்ராலா முடிவு
புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டதும் பதவி விலகப் போவதாக பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா உறுதியளித்தார். இந்தத் தகவலை நேபாள காங்கிரஸ் பொதுச் செயலர் பிமலேந்திரா நீதி தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தின்போது, “அமைச்சரவையில் இருந்து வெளியேறும் முடிவை வாபஸ் பெற வேண்டும்’ என மாவோயிஸ்டுகளை பிரதமர் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமராகவும், நாட்டின் தலைவராகவும் கொய்ராலா இருப்பதால், அவர் ராஜிநாமாவை யாரிடம் சமர்ப்பிப்பது என்பதில் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், அதனால் அதிபர் தேர்வானதும் அவரிடம் ராஜிநாமாவைச் சமர்ப்பிப்பார் எனவும் நீதி கூறினார்.
Average Rating