விடத்தல்தீவை நெருங்கும் இலங்கைப் படையினர் -(ஜெஸ்மின்)
இலங்கைப் படைகள் அடம்பனைக் கைப்பற்றியதைக்கூட புலிகள் இன்று வரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில் தற்போது அடம்பனையும் தாண்டி முள்ளிக்ண்டல். பாப்பாமோட்டை பகுதிகளையும் கைப்பற்றி ஏ-32 பாதையில் படிப்படியாக இராணுவ முக்கியம் வாய்ந்த விடத்தல் தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். படையினரின் முன்னேற்றம் அவ்வப்போது புலிகளினால் முறியடிக்கப்பட்டு அரச படைகள் பழைய நிலைகளுக்கே திரும்ப வேண்டி யேற்படுகின்ற போதிலும் எந்த விலைகொடுத்தாவது விடத்தல் தீவை கைப்பற்றுவதிலேயே படையினர் குறியாக இருக்கின்றனர். இலங்கை அரசு எப்படியும் ஜுலை மாத இறுதிக்குள் விடத்தல் தீவைக் கைப்பற்றி விடுவார்கள் என்றே எதிர்பார்க்ப்படுகிறது. புலிகளில் பல ஆயுதக் கப்பல்கள் கடந்த காலங்களில் விமானப்படையினரால் தாக்கியழித்த பின்னர் புலிகள் தங்களுககு தேவையான அனைத்தையும் தமிழ்நாட்டிலிருந்தே கொண்டு வருகின்றனர். புலிகள் அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் நடமாடுவதாலும் அடிக்கடி கடத்தல் பொருட்களுடன் கைதாவதாலும் தமிழக அரசுக்கு ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாகவே இலங்கை அகதிகள் விடயத்தில் அண்மைக்காலமாக கெடுபிடிகளை அதிகரித்திருக்கிறது. இலங்கை, இந்தியக் கடற்படையினர் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதிலும் புலிகள் அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு தங்கள் அதிவேகப் படகுகளின் உதவியுடன் விடத்தல் தீவை நோக்கி தங்கள் வினியோகத்தை மேற்கொள்கின்றனர். அண்மையில் புலிகளினால் சிறுதீவு எருக்கலம்பிட்டி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு விடத்தல் தீவுப்பகுதிலிருந்தே படகுகளில் சென்று வந்தனர். விடத்தல் தீவு பகுதி ஆழம் குறைவாக இருப்பதால் இப்பகுதி;க்கு இலங்கைப் கடற்படையின் பெரிய படகுகளுக்கு செல்ல முடியாது. மற்றும் புலிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு வசதியாக இருக்கிறது. எனவே இலங்கை இராணுவம் விடத்தல் தீவைக் கைப்பற்றும் பட்சத்தில் அது ஒரு மிகப்பெரிய இராணுவ வெற்றியாக கொள்ளப்படுவதுடன் புலிகளுடனான சண்டையில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விடத்தல் தீவை தக்க வைத்துக்கொள்ள புலிகள் கடும் பிரயத்தனங்களை எடுத்தாலும் அவற்றை முறியடிக்கும் படைவலுவும், மனவுறுதியும் இலங்கை அரசாங்கத்திடம் நிறையவே காண முடிகின்றது.
Average Rating