சிவில் விமான போக்குவரத்துத்துறை சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைப்பு!!
சிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் உருவாகப்பட்டது. அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகள் ஆகியும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து மத்திய அமைச்சரவையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்.எஸ்.சௌத்ரி ஆகிய அமைச்சர்கள் கடந்த 8ஆம் தேதி ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அஷோக் கஜபதி ராஜு வகித்து வந்த விமான போக்குவரத்துத்துறை பொறுப்புகளை பிரதமர் மோடி தற்காலிகமாக ஏற்றார். இந்நிலையில், பிரதமரின் அறிவுறுத்தலின்படி, விமானப் போக்குவரத்துத் துறையை வர்த்தக அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
Average Rating