கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களுக்கு ரூ.4 கோடி: இந்திய தம்பதி கொடுக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கொத்தடிமையாக நடத்திய இந்தோனேஷிய வேலைக்கார பெண்கள் 2 பேருக்கும் 4 கோடி ரூபாயை சம்பளமாக கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாங் ஐலண்டு தீவில் வசித்த இந்தியர் மகேந்தர் ஷப்னானி. அவர் மனைவி வர்ஷா. கோடீசுவரர்களான இவர்கள் வீட்டில் வீட்டுவேலை செய்வதற்காக சேர்க்கப்பட்டவர்கள் சமீரா, எனுங். இவர்கள் இருவரும் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களை இந்திய தம்பதி அடித்து உதைத்தனர். துடைப்பம், குடை ஆகியவற்றால் அடித்து கொடுமைப்படுத்தினர். வாரத்துக்கு 7 நாட்களும், 24 மணிநேரமும் வேலைசெய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு சரியாக சாப்பாடு கொடுக்கவும் இல்லை. அதோடு சம்பளமும் சரியாக கொடுக்காமல் பாக்கி வைத்தனர். சமீரா 2002-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2007-ம் ஆண்டு மே மாதம் வரை வேலை செய்தார். எனுங் 2005-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2007-ம்ஆண்டு மேமாதம் வரை பணியாற்றினார். சமீரா-எனுங் இருவரும் தப்பிச்சென்று போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு வர்ஷாவுக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. அவர் கணவர் மகேந்தருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. அதோடு கொடுமைப்படுத்தப்பட்ட 2 பெண்களுக்கும் கொடுக்கப்படாத சம்பளத்தை இரட்டிப்பாக வழங்கவேண்டும் என்று கூறி, சமீராவுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாயும், எனுங்குக்கு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயும் சம்பளமாக இந்திய தம்பதி கொடுக்கவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
Average Rating