ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தல்: லாட்வியா நாட்டு பெண் அதிபரும் போட்டியில் குதித்தார்
Read Time:1 Minute, 24 Second
ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணன் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய வேட்பாளரான சசி தரூர் உள்பட 5 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் லாட்வியா நாட்டு அதிபர் வைரா விகே-பிரிபெர்கா (வயது 68) இந்த போட்டியில் குதித்துள்ளார். இவர் பெண் ஆவார். இத்தேர்தலில் பெண் போட்டியிடுவது, இதுவே முதல் முறை ஆகும்.
மேலும், இத்தேர்தலில் மோதும் 6 பேரில், இவர் ஒருவர் தான் ஆசியா கண்டத்தை சேராதவர் ஆவார். இவரது பெயரை லாட்வியா, எஸ்தோனியா, லிதுவேனியா ஆகிய 3 பால்டிக் நாடுகள் முன்மொழிந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அடமன்டியோஸ் வாசிலாகிசுக்கு கடிதம் எழுதியுள்ளன.
லாட்வியா அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐ.நா. சபையின் 60 ஆண்டுகால வரலாற்றில், பொதுச்செயலாளர் பதவியில் அமரும் முதல் பெண், அவராகத்தான் இருப்பார்.