மலேசிய வளர்ச்சி திட்டங்களில் பல பில்லியன் டாலர் ஊழல் செய்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் கைது!!(உலக செய்தி)
ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.மலேசிய வளர்ச்சி திட்டங்களில் பல பில்லியன் டாலர் ஊழல் செய்ததாக முன்னாள் பிரதமர் அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், 92 வயதுள்ள மகாதிர் முகமது வெற்றி பெற்று பிரதமரானார். முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், அரசு பணத்தை சுரண்டியதாக எழுந்த குற்றச்சாட்டால் தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், ரசாக்கின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மலேசிய போலீசார் திடீர் ேசாதனை நடத்தினர். அப்போது, ஏராளமான நகைகள், ரொக்கம், நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஆடம்பர பைகள், 200க்கும் மேற்பட்ட பெட்டிகள் என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு எவ்வளவு என உடனடியாக தெரிவிக்க இயலாது என போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மொத்த மதிப்பை போலீசார் அறிவித்தனர்.
இதன்படி, கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,870 கோடியாகும். 12 ஆயிரம் நகைகள், நூற்றுக்கணக்கான கைகடிகாரங்கள், ஆடம்பர கைப்பைகளின் மதிப்பும் இதில் அடங்கும். இது தவிர, ரூ.200 கோடி மதிப்புள்ள பல்வேறு நாட்டு கரன்சிகளும் சிக்கியன.இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகமது கூறியிருந்தார். மேலும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார். மேலும் நாட்டை விட்டு நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோலாலம்பூரில் உள்ள வீட்டில் வைத்து மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating