மெக்சிகோ அரசியலில் திருப்பம் இடதுசாரி கட்சி தலைவர் ஓபிராடர் அதிபராக தேர்வு : 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!!(உலக செய்தி)
மெக்சிகோவில் அரசியல் திருப்பமாக இடதுசாரி கட்சித் தலைவர் ஆந்த்ராஸ் மானுவெல் லோபஸ் ஓபிராடர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மெக்சிகோவில் அதிபர் என்ரிக் பினா நியட்டோவின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஆளும் புரட்சிகர கட்சி சார்பில் ஜோஸ் ஆன்டோனியோ மியாடியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய நடவடிக்கை கட்சி சார்பில் ரிக்கார்டோ அனாயாவும், இடதுசாரி கூட்டணி சார்பில் ஓபிராடரும் போட்டியிட்டனர்.
இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இடதுசாரி தலைவர் ஓபிராடர் 53 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 100 ஆண்டுகளாக புரட்சிகர மற்றும் தேசிய நடவடிக்கை கட்சி தலைவர்களே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மெக்சிகோ அதிபராகும் இடதுசாரி தலைவர் என்ற சாதனையை ஓபிராடர் படைத்துள்ளார். இவர் மெக்சிகோ சிட்டி நகரின் முன்னாள் மேயரும் ஆவார். 64 வயதாகும் ஓபிராடர் டிசம்பர் 1ம் தேதி பதவி ஏற்க உள்ளார். 23 சதவீத வாக்குகளை பெற்ற தேசிய நடவடிக்கை கட்சி 2வது இடத்தையும், புரட்சிகர கட்சி வெறும் 16 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தையும் பிடித்தன.
Average Rating