விண்வெளி ஆய்வு நிலைய பணிமுடித்து பூமிக்கு புறப்பட்டது அட்லாண்டிஸ்
விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையத்தில் சூரியசக்தியால் ஆற்றல் பெறும் அமைப்பை நிறுவியபின் ஞாயிற்றுக்கிழமை பூமிக்குப் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண் ஓடம். விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2003 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு சென்று திரும்பிய கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது. அதைத் தொடர்ந்து ஆராய்ச்சி நிலையக் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் அட்லாண்டிஸ் விண்கலம் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் விண்வெளி வீரர்களுடன் சென்ற அந்த விண்கலம் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்தது. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்குத் தேவையான மின்சாரத்தை சூரியஒளி மூலம் பெற வசதியாக ஒரு அமைப்பு நிறுவப்பட்டது.
பின்னர் நிலையத்திற்குத் தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட சரக்குகளை விண்வெளி வீரர்கள் மாற்றினர். அதன்பிறகு வீரர்கள் ஓய்வெடுத்தனர். அப்போது பூமியை பல்வேறு கோணங்களில் அவர்கள் படம்பிடித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை சர்வதேச நேரப்படி மாலை 6.20 மணிக்கு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அட்லாண்டிஸ் விண்கலம் பிரிந்தது. பின்னர் அது 360 டிகிரி அளவில் நிலையத்தை சுற்றிப் பறந்து தற்போது நிறைவடைந்துள்ள பணிகளை படம்பிடிக்கும். பின்னர் புதன்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு அது பூமியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.