இந்தியா, சீனா எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு: இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!
இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு சமூக தீர்வு காண்பது குறித்து இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா, சீனா எல்லை பகுதிகளில் விதிமுறைகளை மதிக்காமல் சீன ராணுவம் அவ்வப்பொழுது அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. பிரச்னைக்குரிய இடங்களில் சாலைகள், முகாம்கள் அமைக்கும் வேலையில் அடிக்கடி ஈடுபடுகிறது. இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பணிகளை நிறுத்துக்கொள்கிறது. கடந்தாண்டு டோக்லம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதால், இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. 73 நாட்களுக்கு பிறகு இப்பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேபோன்ற நிலை வரும் காலத்தில் தொடராமல் இருக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இந்நிலையில், எல்லை பிரச்னைகள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சீன ராணுவ அமைச்சர் வேய் பெங்கே 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த செவ்வாயன்று பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருவதாகவும், அதற்கு சீனா ஒத்துழைப்பு அளிப்பதாகவும் வேய் பேங்கேவிடம் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, சீன அமைச்சர் வேய் பேங்கே சந்தித்தார். எல்லை பிரச்னைகள் குறித்தும், அதை சுமூகமாக தீர்ப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
வடகிழக்கு மாநிலங்களில், பிரச்னைக்குரிய பகுதிகளில் இந்தியா சார்பில், சாலை, குடிநீர், தொலைதொடர்பு உள்ளிட்ட திட்டப்பணிகள் செய்யப்படுவதாக சீன தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மக்களின் தேவைக்காக இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என நிர்மலா சீத்தாராமன் எடுத்துரைத்தார். வருங்காலத்தில் இருநாடுகளில் இடையே சுமுக உறவு ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எல்லை பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக தொலைபேசி சேவையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
Average Rating